நிலக்கடலை பண்ணை பள்ளியில் விவசாயிகளுக்கு பயிற்சி நிறைவு
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை, அட்மா திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 25 விவசாயிகளுக்கு, ராக்கிப்பட்டி நிலக்கடலை ஒருங்கிணைந்த பயிர் மேலாண் பண்ணை பள்ளியில், 3 மாதங்களாக, 5 கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.அதன் நிறைவு விழா, வயல் தின விழா நேற்று முன்தினம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா தலைமை வகித்தார். அதில் ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் பழனிசாமி, நிலக்கடலை பயிர் சாகுபடி, அறுவடை, அறுவடைக்கு பின் நேர்த்தி, மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.மேலும் வயல் தின விழாவையொட்டி, 5 மீ., அகலம், 5 மீ., நீளம் கொண்ட சதுர வடிவ வயலில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிரில் மகசூல் அளவு எடுத்து ஹெக்டேருக்கு எவ்வளவு என கணக்கிடப்பட்டது.தவிர, 25 விவசாயிகள், 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பண்ணை மேலாண் தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.பயிற்சி நிறைவாக விவசாயிகளுக்கு, ஐ.பி.எம்., கிட் பேக் மற்றும் தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.