மாவட்டத்தில் வீழ்ந்த அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 21 அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் அது குறைந்து இந்தாண்டு 13 பள்ளிகள் மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கான காரணிகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.மாவட்டத்தில் 2022-23 கல்வியாண்டில் 95 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன.அதில் 21 அரசு, ஆதிதிராவிட பள்ளிகள் அடங்கும். இந்த கல்வியாண்டில் நுாறு சதவீத பள்ளிகள் எண்ணிக்கை 80 ஆக குறைந்து விட்டது.அதே போல் அரசு பள்ளிகளில் 13 மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆதிதிராவிட நலப் பள்ளிகளும் அடங்கும். மாவட்டத்தில் ஒரு நகராட்சி பள்ளி கூட நுாறு சதவீத தேர்ச்சி பெறவில்லை.பொதுவாகவே அரசு பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகளில் குறைபாடு தொடர்பான பல்வேறு கற்பிதங்கள் இருந்தாலும், ஆசிரியர்கள் முடிந்தளவு தேவையான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர்.ஆசிரியர் பற்றாக்குறை, போதிய ஆய்வக வசதி இல்லாமை போன்ற காரணங்களால் மாணவர்கள் பின் தங்கினாலும், பல ஆண்டுகளாக தேர்ச்சியில் முன்னேறி கொண்டே தான் இருந்தனர். ஆனால் தற்போது அது மிகவும் குறைந்து விட்டது.இது அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் பலரை வேதனையடைய செய்துள்ளது. ஆதிதிராவிட நலப்பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. நகராட்சி பள்ளிகள் 94.3 சதவீதம் தேர்ச்சி. ஆனால் அரசு பள்ளிகளோ 93.06 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளன.இதில் மாணவிகளை காட்டிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைவு. 89.39 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.பல ஆண்டுகளாக 90 சதவீதத்திற்கு கீழ் குறையாமல் இருந்த சதவீதம் தற்போது குறைந்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கற்றல் கற்பித்தலை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் இன்னும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.