பழனி உண்டியலில் திருட்டு; உதவி பேராசிரியர் கைது
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது பணம் திருடிய, பழனியாண்டவர் கல்லுாரி உதவி பேராசிரியர் மைதிலி 37, கைது செய்யப்பட்டார்.பழனி முருகன் கோவிலில் மாதந்தோறும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. இதில், கோடிக்கணக்கான ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக கிடைக்கிறது. இதன் எண்ணிக்கை பணியில் கோவில் பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.நேற்று முதல் உண்டியல் எண்ணிக்கை பழனி கோவிலில் நடந்து வருகிறது. இதில் ஈடுபட்ட பழனியாண்டவர் கல்லுாரி உதவி பேராசிரியர் மைதிலி என்பவர், பணத்தை திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. கோவில் நிர்வாகத்தினர் அடிவாரம் போலீசில் புகார் அளித்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த, 82,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.