பள்ளியில் அசைவத்துக்கு தடை பெற்றோர் கடும் அதிருப்தி
நொய்டா: டில்லி அருகே, நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு அசைவ உணவு கொடுத்தனுப்பக் கூடாது என்ற உத்தரவுக்கு பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.நொய்டா 132வது செக்டாரில் உள்ள தனியார் பள்ளி, கடந்த 7ம் தேதி பெற்றோருக்கு வாட்ஸாப் வாயிலாக அனுப்பிய தகவலில், மதிய உணவாக காலையிலேயே அசைவ உணவு சமைத்தால் அது கெட்டுப்போக வாய்ப்புள்ளது. அது உடல் நலத்துக்கு கேடு. எனவே, குழந்தைகளின் மதிய உணவுக்கு அசைவ உணவுகளை கொடுத்தனுப்ப வேண்டாம். மேலும், அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடவும் இது உதவும். இது ஒரு கோரிக்கை மட்டுமே என கூறப்பட்டு இருந்தது.பள்ளியின் இந்த உத்தரவுக்கு பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், அசைவ உணவுகளை மதிய உணவாக சாப்பிட தங்கள் குழந்தைகளை அனுமதிக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.