பள்ளிகளில் இன்று ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல் 382 பார்வையாளர்கள் நியமனம்
மதுரை : மதுரையில் 382 தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) நுழைவு வகுப்புகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டிற்கான குலுக்கல் முறை மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.மாவட்டத்தில் இச்சேர்க்கைக்காக 8591 விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரப்பெற்றன. ஆவணங்கள் சரிபார்ப்பில் 7913 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 99 தகுதியற்றவை எனவும், 579 நபர்கள் விண்ணப்பங்களில் உரிய ஆவணம் இல்லை என முடிவு செய்யப்பட்டது.நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்ற பள்ளிகளில் இன்று (மே 28) குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி பள்ளிகளில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது.இதற்காக தலைமையாசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 382 அரசு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது.அவர் கூறுகையில், குலுக்கல் முறையில் சேர்க்கை பணிகளை புகாருக்கு இடமளிக்காமல், வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மற்றும் காத்திருப்போர் பட்டியல்கள் நாளை (மே 29) பள்ளி அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும். கலெக்டர் உள்ளிட்டோர் தேர்வு பட்டியலை பார்வையிட உள்ளனர் என்றார்.