உள்ளூர் செய்திகள்

மாணவர்களுடன் கைகோர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வாசன்

த.மா.கா., தலைவர் வாசன், திடீரென ஆர்ப்பாட்ட மேடையிலிருந்து, கீழே இறங்கி சென்று, அங்கு கூடியிருந்த மாணவர்களிடம் கைகோர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும்; சென்னை சட்டக் கல்லூரியை மாற்றக் கூடாது; இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியை, தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்; வட்டியில்லா கல்விக் கடன் வழங்க வேண்டும்; வேலை கிடைக்காத மாணவர்களுக்கு, உதவித்தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், த.மா.கா., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. த.மா.கா., துவக்கிய பின், திடீரென சென்னையில், முதல் முறையாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதில், சென்னையில் உள்ள சில கல்லூரிகளின் மாணவர்கள், மகளிர் அணியினர் மற்றும் மாவட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். த.மா.கா., தலைவர் வாசன், வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அவர் மேடையில் ஏறியதும், திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில், கீழே இறங்கி, அங்கு திரளாக கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் சென்று, மாணவர்களோடு நின்று, ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டம் முடித்து, மீண்டும் மேடைக்கு சென்று, வாசன் பேசுகையில், ”மாணவர்கள் மீது, போலீசார் தடியடி போன்ற வன்முறையை கடைபிடிப்பதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், கல்வி உதவித்தொகை கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்