ஏரி வழக்கு; கல்வி நிறுவனத்துக்கு நோட்டீஸ்
சென்னை: போரூர் ஏரியில், குத்தகை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தனியார் கல்வி நிறுவனம், அறக்கட்டளைக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போரூர் ஏரியில், சில பகுதிகளை, தனியார் கல்வி நிறுவனத்துக்கு, 99 ஆண்டு கால குத்தகை முறையில் தமிழக அரசு அளித்துள்ளது. நீர்நிலை பகுதியில் குத்தகைக்கு கொடுக்கப்பட்டதை ரத்து செய்து, அந்த நிலத்தை மீட்க வேண்டும் என, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், போரூரை சேர்ந்த ஜெயவீரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி எம்.சொக்கலிங்கம், உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய முதன்மை அமர்வு முன், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, நீதிபதிகள் வழங்கிய உத்தரவில் தனியார் கல்வி நிறுவனம், அதன் அறக்கட்டளை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர், பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என, தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை, பிப்.,2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.