பள்ளி கல்வியில் இருந்து நுாலகத்துறை பிரிக்கப்படுமா?
சென்னை: நகர்ப்பகுதிகளை போன்று, கிராமப்புறங்களை தரம் உயர்த்தவும், புத்தக கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், நுாலகத் துறையை பள்ளி கல்வியில் இருந்து பிரிக்க வேண்டும் அல்லது வெளிப்படையான நிர்வாக முறையை அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் பொது நுாலகத் துறையின் செயல்பாடுகளில், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கல்வியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத நுாலகர்கள் சிலர் கூறியதாவது:கிளை நுாலகங்கள், ஊர்ப்புற நுாலகங்கள் போன்றவற்றின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. மைய நுாலகங்களுக்கு புத்தக கொள்முதல் செய்வதில் மட்டும், நுாலகத்துறை அக்கறை காட்டுகிறது. கிளை நுாலகங்கள் மற்றும் ஊர்ப்புற நுாலகங்களுக்கு, தரமான புத்தகங்கள் வாங்குவதில்லை. அதேபோல, அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மதுரை கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் போன்ற நுாலக வளாகங்களை, பள்ளிக் கல்வியின் கூட்டரங்கு போல பயன்படுத்துவதால், நுாலகம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை.நுாலக ஆணைக்குழுவில் ஆளுங்கட்சியை சார்ந்தவர்களையே நியமித்து, அதற்கேற்ப ஒரு சார்பான புத்தகங்கள், நாளிதழ்கள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், கிராமப்புற நுாலகங்களுக்கு வரும் இளைஞர்கள், மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், நாளிதழ்கள் கிடைப்பதில்லை. அதேநேரம், நுாலக ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு பெற்ற வெளியீட்டாளர்களின் புத்தகங்களே கொள்முதல் செய்யப்படுகின்றன.எனவே, நுாலகத் துறையை தரம் உயர்த்தும் வகையிலும், நகர்ப் பகுதிகள் முதல் கிராமப்பகுதிகள் வரையிலான நுாலகங்களுக்கு, தரமான புத்தகங்களை வாங்கும் வகையிலும், நிர்வாக முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அரசியல் கட்சி சார்ந்த நுாலக ஆணைக் குழுக்களை கலைக்க வேண்டும். இதற்கு, பள்ளிக்கல்வியில் இருந்து, தனித்துறையாக பிரிக்கவோ, தமிழ் வளர்ச்சி துறையுடன் இணைந்து செயல்படவோ முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழகத்தில் அரசு சார்பில், 32 மாவட்ட மைய நுாலகங்கள், 1,926 கிளை நுாலகங்கள், 1,915 ஊர்ப்புற நுாலகங்கள், 14 நடமாடும் நுாலகங்கள், 771 பகுதி நேர நுாலகங்கள் என, 4,660 நுாலகங்கள் செயல்படுகின்றன. இதுதவிர, சென்னையில் அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கன்னிமாரா பொது நுாலகம், தஞ்சையில் சரபோஜி சரஸ்வதி மஹால் நுாலகம், உ.வே.சா., நுாலகம் போன்றவையும் உள்ளன. இவை அனைத்தும், பொது நுாலகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. பொது நுாலகத் துறை, பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படுகிறது. துறையின் இயக்குனராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., செயல்படுகிறார்.