உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள்

சின்னமனுார்: சின்னமனுார் மெயின் ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, சீப்பாலக்கோட்டை ரோடுகளில் போக்குவரத்து நெருக்கடி உச்சகட்டத்தில் உள்ளது. இதனால் பொது மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுவது தொடர்கிறது.இந்நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது. சின்னமனுாரைச் சுற்றி சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, எல்லப்பட்டி, அம்மாபட்டி, குச்சனுார், அய்யம்பட்டி, புலி குத்தி, சிந்தலச்சேரி, டி.சிந்தலச்சேரி, மேலச்சிந்தலச்சேரி, சங்கராபுரம் உள்ளிட்ட 24 கிராமங்கள் உள்ளன.அதிக நெரிசல்இதுதவிர மேகமலையில் உள்ள ஏழு தேயிலை தோட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் பல சரக்கு, ஜவுளி, வேளாண் இடுபொருள்கள், மருத்துவம் பார்ப்பதற்காக தினந்தோறும் சின்னமனுார் வந்து, செல்வது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். எனவே அதிகாலை முதல் இரவு 10:00 மணி வரை மெயின் ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, சீப்பாலக்கோட்டை ரோட்டில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.காரணம் என்னஇந்த ரோட்டின் ஆரம்பத்தில் பஸ் நிறுத்தம் இருப்பதால், மலை கிராமங்களுக்கு செல்பவர்கள் வரிசையாக நிற்கின்றனர். அடுத்து வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு, மினி பஸ்சை சீப்பாலக்கோட்டை ரோட்டில் நிறுத்த போலீஸ் அனுமதிப்பது ஏன்? இதனால் இப்பகுதியில் நடக்க முடியாத நிலை தொடர்கிறது. டூவீலர்கள் நடுரோடு வரை பார்க்கிங் செய்யப்படுகின்றன. இதனால் ஹைவேவிஸ் மலைக் கிராமங்களுக்கு செல்வோரும் அவதிப்படுகின்றனர்.நடவடிக்கை தேவை முனிராஜா, தலைமை யாசிரியர், சின்னமனுார்: நெருக்கடியை தவிர்க்க நகராட்சியும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை நேரங்களில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சைக்கிள்களில் வரும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் பலர் இந்த ரோட்டை பயன்படுத்துவதை தவிர்க்க துவங்கி விட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்வர வேண்டும், என்றார். இடியாப்ப சிக்கல் விஜயகுமார், வர்த்தகர், சின்னமனுார்: காலையில் சீப்பாலக்கோட்டை ரோடு வழியே செல்வதை தவிர்த்து விட்டேன். அந்த அளவிற்கு நெருக்கடி உள்ளது. ஒரு நாள் என்றில்லை. ஆண்டு முழுவதும் தொடர்கிறது. முகூர்த்த நாள் என்றால் போகவே முடியாது. இடியாப்ப சிக்கலில் உள்ளது இந்த ரோடு. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை, என்றார். மணிகண்டன், வர்த்தகர், சின்னமனுார்: நெரிசலை குறைக்க அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு அதற்கு ஏற்றபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாதது ஒன்றும் இல்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல வழிகள் உள்ளன. பள்ளி மாணவர்கள் பயமின்றி சைக்கிள், நடந்து செல்ல, பொது மக்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை அவசியம், என்றார். தேவை டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் பிரச்னைக்கு தீர்வு என்ன : போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். சீப்பாலக்கோட்டை போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மினி பஸ் நிறுத்தம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து, மினி பஸ் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறைப்படுத்த வேண்டும். ஆட்டோக்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும். பஸ் நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கிழக்கு திசையில் இருந்து வரும் வாகனங்களை பழைய பாளையம் ரோட்டின் வழியே திருப்பி மெயின்ரோடு செல்ல நடவடிக்கை எடுக்கலாம். அல்லது முத்தாலம்மன் கோயில் வீதி வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டில் சென்று போலீஸ் குடியிருப்பு அருகே நிறுத்தம் ஏற்படுத்தலாம்.போலீஸ், வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்து துறை இணைந்து வர்த்தகர்கள், பொதுமக்கள், ஆட்டோ, மினி பஸ் உரிமையாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டி அவசர தீர்வு காண வேண்டும். அவசரமும்... அவசியமும் இதில் காட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்