சர்வதேச தரத்தில் விவசாய படிப்பு: பவார்
நாட்டின் விவசாய படிப்பானது சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறினார். விவசாய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் ஐ.சி.ஏ.ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் உரையாற்றிய சரத் பவார் இவ்வாறு தெரிவித்தார். தனது உரையில் மேலும் அவர் கூறியதாவது, "விவசாயக் கல்வியில் அரசு - தனியார் கூட்டு முயற்சி ஏற்பட வேண்டும். இதன்மூலம் இத்துறையில் முன்னேற்றம் ஏற்படும், தொழில்நுட்பம் ஆய்வகத்திலிருந்து சந்தைக்கு செல்லும், தேசிய விவசாய ஆராய்ச்சி வலிமைப் பெறும். விவசாய துறையில் சிறந்த மேம்பாடு காண நமக்கு திறன்வாய்ந்த மனிதவளம் தேவை. இந்த தேவையை ஈடுசெய்யும் பொருட்டு நமது விவசாய கல்வி திட்டத்தில் பல சிறப்பு அம்சங்களை சேர்க்க வேண்டும். மேலும் ஒரு தேசிய விவசாய கல்வி திட்டத்தை உருவாக்குவது பற்றி ஐ.சி.ஏ.ஆர். திட்டமிடுகிறது. மேலும் தற்போது வேளாண் பல்கலைக்கழகங்களில் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டமானது, மாணவர்களின் அறிவு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தும்" என்றார்.