இன்ஜி., இரண்டாம் சுற்று கலந்தாய்வு; 79,403 பேருக்கு தற்காலிக ஆணை
சென்னை: இன்ஜினியரிங் இரண்டாம் சுற்று கலந்தாய்வில், 79,403 மாணவ மாணவியருக்கு, பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி தொடங்கியது.பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு, கடந்த ஜூலை 20ம் தேதி முதல், ஆக., 3ம் தேதி வரை நடந்தது. முதல் சுற்றில், பொதுப்பிரிவில் 26,802 மாணவ மாணவியர்; 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,177 மாணவ மாணவியர் என, மொத்தம் 28,979 பேருக்கு, பி.இ., பி.டெக்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.இதை தொடர்ந்து, இன்ஜி., இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது.இதில், 93,117 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மாணவர்கள் கடந்த 3 முதல் 5ம் தேதி வரை, தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.இந்நிலையில், விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணை நேற்று வெளியிடப்பட்டது.அதன்படி, பொதுப்பிரிவில் 68,388 மாணவர்கள்; 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 11,015 மாணவர்கள் என, மொத்தம் 79,403 பேருக்கு, பி.இ., பி.டெக்., படிப்புக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.