வகுப்பில் சண்டை: மாணவன் பலி
ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில், பள்ளி மாணவர்கள் இருவர் இடையே நடந்த சண்டையில், ஒருவன் உயிரிழந்தான். ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 10ம் வகுப்பைச் சேர்ந்த இரு மாணவர்கள் இடையே சிறு விஷயத்துக்காக சண்டை ஏற்பட்டது. இருவரும் முரட்டுத்தனமாக தாக்கிக் கொண்டனர். சண்டையை, கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த ஆசிரியர், வேகமாக ஓடிச் சென்று மாணவர்களை விலக்கி விட்டார். அதற்குள் படுகாயமடைந்திருந்த ஒரு மாணவன் மயங்கி விழுந்தான். அந்த மாணவன், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மூளையில் ரத்தம் கட்டியிருந்த தால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அந்த மாணவன் உயிரிழந்தான். இதுகுறித்து, ஐதராபாத் மாநகர போலீஸ் அதிகாரி கமலாசன் ரெட்டி, நிருபர்களிடம் கூறுகையில், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இரு மாணவர்களும் சண்டையில் ஈடுபட்டதால், மற்றொரு மாணவனை கைது செய்வதற்கான வாய்ப்பில்லை. இருவரும் மைனர்கள்; தவிர, தற்செயலாக மரணம் ஏற்பட்டதாக நம்புகிறோம், என்றார்.