யோகா மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங்
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும், தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை இடங்கள் பகிர்ந்தளிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது.கூட்டத்திற்கு பின் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:தமிழகத்தில், 17 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 1,153; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 557 என 1,710 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடக்க உள்ளது.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழகத்தில் டாக்டர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தவறான கருத்து. 1,021 டாக்டர்கள் நியமனத்திற்கான தேர்வு முடிவுகள், ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளன. இதை தொடர்ந்து காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.