பள்ளி கல்வித் துறையில் 561 இளநிலை உதவியாளர்கள் நியமனம்
குரூப்-4 நிலையில், பள்ளி கல்வித் துறைக்கு, 1,000 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், 561 தேர்வர்களின் பெயர் பட்டியலை, கல்வித் துறையிடம், தேர்வாணையம் ஒப்படைத்தது. இதை தொடர்ந்து, இவர்களுக்கு, நேற்று மாவட்ட தலைநகரங்களில், ஆன்-லைன் வழியில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. காலையில், மாவட்டத்திற்குள் இருந்த காலி பணியிடங்களுக்கும், பிற்பகலில், மாவட்டத்தில் இருந்து, பிற மாவட்டங்களுக்கும், கலந்தாய்வு நடந்தது.நேற்று மாலை, 4:00 மணிக்குள், அனைத்து தேர்வர்களுக்கும், பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. "தேர்வாணையத்தில் இருந்து, மேலும், 500 தேர்வர்களின் பட்டியல், கல்வித் துறைக்கு வர உள்ளது. இந்த பட்டியல் வந்ததும், அவர்களும் உடனடியாக, பணி நியமனம் செய்யப்படுவர்" என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களில், அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.