உள்ளூர் செய்திகள்

விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ.,

புதுடில்லி: விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்ட தேர்வுக்கு பிந்தைய சேவைகளுக்கு, 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்துள்ளதாக சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.மத்திய அரசின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ., இந்தாண்டு நடத்திய பிளஸ் 2 தேர்வை நாடு முழுதும் 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்தாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு ஓ.எஸ்.எம்., எனப்படும், 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற கணினி திரை வழியிலான மதிப்பீட்டு முறையில் திருத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியான போது, லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் சி.பி.எஸ்.இ.,யிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து, மாணவர்களின் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதற்காக, தொடங்கப்பட்ட பிரத்யேக பக்கத்தில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இதில், ஒரு சிலரின் பதிவு எண்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று புகார் எழுந்தது. பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் தெளிவாக தெரியவில்லை என்றும் அதில் தங்களுடையது இல்லை என்றும் ஒரு சில மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கை:தேர்வுக்கு பிந்தைய சேவைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதள பக்கத்தால் மாணவர்கள் பலனடைந்துள்ளனர். கடந்த 2 முதல் 7ம் தேதி வரையிலான காலக்கெடுவில், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஐ.ஐ.டி., குழுவினரின் மேற்பார்வையின் கீழ் சி.பி.எஸ்.இ., இணையதளம் சிறப்பாக செயல்பட்டது.இந்த காலக்கட்டத்தில், 1.6 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், 3.8 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தொடர்பான கோரிக்கைகளை வெற்றிகரமாக சமர்ப்பித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்