பிளஸ் 2 செய்முறை தேர்வு: கள்ளக்குறிச்சியில் சி.இ.ஓ., ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 123 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும், 16,985 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். அவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது.இதற்காக ஆய்வக வசதி உள்ள 111 பள்ளிகள் தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வேலைவாய்ப்பு திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் 20 மதிப்பெண்களுக்கும், தொழிற்கல்வியில் 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். வரும் 14ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடக்கிறது.கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செய்முறைத் தேர்வினை சி.இ.ஓ., கார்த்திகா பார்வையிட்டு, தேர்வினையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள், ஆய்வகத்தில் உள்ள உபகரண பொருட்கள், தேர்வு சரியாக நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.பள்ளி தலைமை ஆசிரியை கீதா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.