நிலுவையிலுள்ள ரூ.9.83 கோடி வருங்கால வைப்புநிதி
மாநகராட்சியில் 438 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் மாத சம்பளத்தில் 1990 ஏப்.,1 முதல் 2019 மார்ச் 31 வரை பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815ஐ மாநகராட்சி சார்பில் மாநில கணக்காயர் அலுவலகத்தில் செலுத்தாமல் இருந்தனர். இதனால் இத்தொகை எங்கே போனது என விமர்சனம் எழுந்தது. மேலும் ஆசிரியர்கள் பி.எப்., தொகை, கடன் பெறமுடியாமல் தவித்தனர். அப்போது தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் எதிரொலியாக அந்த தொகையில் ரூ.10 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 295ஐ 2023 பிப்.,20ல் மாநில கணக்காயர் அலுவலகத்தில் மாநகராட்சி செலுத்தியது. அதேசமயம் நிலுவையில் உள்ள ரூ.9 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 520 இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது.ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: இவ்விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டோம். மேலும் வேறு திட்டங்களுக்கு அந்த தொகை செலவிடப்பட்டதா என மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டோம். உரிய பதில் இல்லாததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு தொடர் போராட்டம் நடத்தி தான் முதற்கட்ட தொகை பெறப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர்கள் நலன் கருதி மீதி பி.எப்., தொகையையும் மாநகராட்சி விரைவில் வழங்க வேண்டும். இதுகுறித்து கமிஷனர், எம்.பி.,க்கு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலுவை தொகையை வழங்குவர் என எதிர்பார்க்கிறோம், என்றார்.