5,000 மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஈ.வெ.ரா., அரசு கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து ரத்து
திருச்சி, காஜாமலை பகுதியில் ஈ.வெ.ரா., அரசு கலைக்கல்லுாரி 1965ல் துவக்கப்பட்டு 1999ல் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இங்கு, இளங்கலை, முதுகலை படிப்புகளில் 15 துறைகளில் 5,000 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் தன்னாட்சி அந்தஸ்தை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதன்படி, 2021ல் தன்னாட்சி அந்தஸ்தை ஈ.வெ.ரா., கல்லுாரி நிர்வாகம் புதுப்பித்திருக்க வேண்டும். அப்போது இருந்த கல்லுாரி தேர்வுத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு, தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து, தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்து, யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதனால் இரண்டு ஆண்டுகளாக 5,000 மாணவர்களுக்கு மேல் கல்லுாரியால் வழங்கப்பட்ட இளங்கலை, முதுகலை பட்டம் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த கல்லுாரி நிர்வாகம் உடனடியாக மாநில உயர் கல்வித்துறை வாயிலாக, தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிக்க யூ.ஜி.சி.,க்கு விண்ணப்பித்தது. ஆனால் மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்காததால் விண்ணப்பத்தை ஏற்க முடியாது என யு.ஜி.சி., நிராகரித்து விட்டது. இதனால் கல்லுாரியில் மூன்று ஆண்டுகளில் படித்து பட்டம் பெற்ற, 5,000 பேரின் எதிர்காலமும், தற்போது கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.கல்லுாரியின் தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட கல்லுாரி தேர்வுத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதல்வர் ஈ.வெ.ரா., அரசு கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், தன்னாட்சி அதிகாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதன்படி கல்லுாரி சார்பில் புதுப்பிக்க விண்ணப்பிக்கப்பட்டு அது பரிசீலனையில் உள்ளது. எனவே தன்னாட்சி அதிகாரம் ரத்து என்ற செய்தியில் உண்மையில்லை என கூறியுள்ளார்.