உள்ளூர் செய்திகள்

69 பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிப்பு

சேலம்: பொன் விழா கண்ட அரசு கல்லுாரியில், 69 பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டு தேர்ச்சி விகிதம் சரியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடசென்னிமலையில், 128 ஏக்கரில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இதற்கு, 1972ல் அப்போதைய தமிழக கவர்னர் ஷா அடிக்கல் நாட்டினார். 73 அக்., 23ல் அப்போதைய அமைச்சர் ராஜாராம் திறந்து வைத்தார். முதலில், பி.ஏ., தமிழ் தொடங்கப்பட்டது. 79ல் கலை, அறிவியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன.தற்போது இளங்கலை, இளநிலை அறிவியலில், பி.ஏ.,  தமிழ், ஆங்கிலம்; பி.காம்., வணிகவியல்; பி.எஸ்சி., - இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், பி.பி.ஏ., பாடங்கள் உள்ளன. முதுகலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல்; எம்.பில்.,லில் தமிழ், வரலாறு, கணினி அறிவியல், வணிகவியல்; பிஹெச்.டி.,யில் தமிழ் பாடப்பிரிவுகள் உள்ளன.சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், நாமக்கல், கடலுார், விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த, 1,963 மாணவர்கள், 926 மாணவியர் படிக்கின்றனர். 4 விடுதிகள் உள்ளன. ஆனால், 2004 வரை பாடப்பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்த பேராசிரியர் பணியிடம் மட்டுமே உள்ளது. பின் பாடப்பிரிவு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்நிலையில், 105 பேராசிரியர்கள் பணியிடத்துக்கு, 36 பேர் மட்டும் உள்ளதால், 69 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்லுாரி முதல்வர் சித்ரா, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். இதனால் முதல்வர் பணியிடமும் காலியாக உள்ளது. 2022 ஜூன் முதல், பொருளியல் துறையில் ஒரு பேராசிரியர் கூட இல்லாத அவலம் உள்ளதால் அத்துறை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. 2005 முதல் தற்போது வரை, நுாலகர் பணியிடம் காலியாகவே நீடிக்கிறது.உடற்கல்வி பிரிவில், 2012 முதல், ஒரு உடற்கல்வி இயக்குனர் மட்டும் உள்ளார். 2,889 மாணவ, மாணவியர்களுக்கு ஒரே உடற்கல்வி இயக்குனர். 926 மாணவியருக்கு பெண் உடற்கல்வி இயக்குனர் தனியே இல்லாததால் அவர்கள் விளையாட்டுகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. 2005 அக்., 25 முதல், மார்க்கர் எனும் அளவீடு பணியாளரும் நிரப்பப்படவில்லை. குறிப்பாக ஆங்கிலம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடர்வதால் பருவத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. எம்.பில்., பிஹெச்.டி., வரை உள்ள பாடப்பிரிவுகளால், பணியில் உள்ள பேராசிரியர்களாலும் முழுமையாக பாடங்களை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து கல்லுாரி முதல்வர் செல்வராஜ்(பொ) கூறுகையில், பேராசிரியர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடம் குறித்து பல்கலை, அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். முதல் சுழற்சியில்(ஷிப்ட்), 61, 2வது சுழற்சியில், 26 என, 87 கவுரவ விரிவுரையாளர்கள், 36 பேராசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்