உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 8 மாதங்களில் 47 யானை, 5 புலிகள் இறப்பு விஷம் வைத்து கொலையா என விசாரணை

8 மாதங்களில் 47 யானை, 5 புலிகள் இறப்பு விஷம் வைத்து கொலையா என விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில், இந்தஆண்டு ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில், 47 யானைகள், ஐந்து புலிகள் இறந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவை, விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என, வனத்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.தமிழக வனப்பகுதிகளில் யானைகள், புலிகள் பிரதான உயிரியல் ஆதாரமாக அமைந்துள்ளன. இவற்றின் நடமாட்டம், இனப்பெருக்கம் அடிப்படையில், வனப்பகுதிகளில் சூழலியல் தன்மை கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, யானைகள், புலிகள் பாதுகாப்புக்காக, பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கவலை

தமிழக வனத்துறையின் அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்களின்படி, தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை, 3,063 ஆகவும்; புலிகள் எண்ணிக்கை, 306 ஆகவும் உயர்ந்துள்ளது. யானைகள், புலிகள் எண்ணிக்கை உயர்ந்தாலும், இறப்புகளின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. அதாவது, கடந்த எட்டு மாதங்களில், நீலகிரி மாவட்டம் முதுமலையில், 16 யானைகள்; கோவை மாவட்டத்தில், 14 யானைகள்; ஈரோடு சத்தியமங்கலத்தில், ஒன்பது யானைகள் உட்பட, 47 யானைகள் இறந்துள்ளன. இதில், நான்கு யானைகள் மட்டுமே மனிதர்களால் கொல்லப்பட்டன என, வனத்துறை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சையானது

கடந்த ஆண்டு நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில், 10 புலிகள் இறந்தது பெரிய அளவில் சர்ச்சையானது. தேசிய புலிகள் ஆணைய விசாரணைக்கு பின், பெரும்பாலான புலிகள் இயற்கை காரணங்களால் இறந்ததாக வனத்துறை தெரிவித்தது. இந்த ஆண்டு எட்டு மாதங்களில், ஐந்து புலிகள் இறந்துள்ளன. ஒன்று நெல்லையிலும், நான்கு புலிகள் நீலகிரியிலும் இறந்துள்ளன. அதில், நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில், இரு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசிய புலிகள் ஆணைய மேற்பார்வையில், இதற்கான விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

'விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்'

'ஓசை' என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கே.காளிதாசன் கூறியதாவது: கடந்த 2006 முதல் அறிவியல் பூர்வமான முறையில், புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, நாட்டில் புலிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்தது. பொதுவாக புலிகளின் ஆயுட்காலம், 10 முதல் 15 ஆண்டுகள். ஆனால், புலிகள் எப்போதும், காட்டில் தனக்கான நில பரப்பை எல்லை வகுத்து, அதற்குள் தனித்து வாழும் தன்மை உடையவை. ஒரு புலி வசிக்கும் பகுதியில், வேறு புலிகள் வசிக்க அனுமதிக்காது என்ற அடிப்படையில் பார்த்தால், இதன் எண்ணிக்கைக்கு ஏற்ப வாழ்விடங்களின் பரப்பளவு அதிகரிக்க வேண்டிய தேவை எழுகிறது. இதனால், பிரதான புலிகள் காப்பகங்களுக்கு இணையாக, அதை ஒட்டிய காப்பு காடுகளிலும், கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்வை கருத்தில் வைத்து, புதிய காப்பகங்கள் அறிவிக்கப்பட்டாலும், காப்பு காடுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. புலிகள் காப்பகங்களை ஒட்டிய பகுதிகளில், தங்கள் கால்நடைகளை புலி வேட்டையாடினால், விவசாயிகள் அதிருப்தி அடைகின்றனர். புலி வேட்டையாடி பதுக்கி வைத்துள்ள கால்நடைகளின் உடலில், விஷத்தை சேர்த்து விடுகின்றனர். இது, புலிகள் இறப்புக்கு காரணமாகி விடுகிறது.காட்டு விலங்குகளால் வளர்ப்பு கால்நடைகள் இறப்புக்கு உள்ளானால், விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கினால், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கலாம். நீலகிரி மாவட்டம் கூடலுாரில், காட்டு பன்றி உடலில் விஷம் வைத்தது குறித்து, வனத்துறை விசாரித்து வருகிறது. விசாரணை நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.-- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அய்யாத்துரை
ஆக 26, 2024 08:28

எட்டுமாசமா கொர் கோர். இல்லே துட்டு வாங்கிட்டு புதைச்சிருப்பாங்க. இப்போ புது ஆள் மாற்றலாகி வந்து மாமூல் கேப்பாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை