UPDATED : ஆக 20, 2024 10:36 AM | ADDED : ஆக 20, 2024 01:36 AM
சென்னை: என்.எல்.சி., நிலக்கரி சாம்பலால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கலந்த நீரைப் பயன்படுத்தி, விவசாயம் செய்வதால் நிலங்கள் மாசடைந்து, விளைச்சல் குறைகிறது. இந்த நிலங்களில் விளையும் அரிசி சாதத்தில் சாம்பல் வாசனை வருகிறது. ஐந்து மணி நேரத்தில் சாதம் கெட்டு விடுகிறது என, நெய்வேலி பகுதி விவசாயிகள் புகார் தெரிவிப்பதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணக் குழு உறுப்பினர் அருண்குமார் வர்மா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:என்.எல்.சி., நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பலால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, கடலுார் மாவட்ட நிர்வாகம் கால அவகாசம் கோரியுள்ளது.தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நிலக்கரி சாம்பலால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அடங்கிய அறிக்கை தயாராக உள்ளது' என்றார். இது தொடர்பான விரிவான அறிக்கையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 23ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.