சென்னை : அ.தி.மு.க., கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர, ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோருக்கு அனுமதி அளித்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அ.தி.மு.க., கட்சி விதிகளில் திருத்தம், உட்கட்சி தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து, கட்சியின் உறுப்பினர்கள் எனக்கூறி, ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோர், அ.தி.மு.க., தொண்டர்கள் சார்பில், உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா மறைந்த பின், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி, அதற்கு ஏற்ப விதிகளை திருத்தம் செய்தது, கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது' என, கூறினர். காலாவதியாகவில்லை மனுவை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க., தொண்டர்கள் சார்பாக, கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்து, கடந்த 2022ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில் குமார் அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, 'சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், அ.தி.மு.க., உறுப்பினர்களே கிடையாது. எனவே, கட்சி தொண்டர்கள் சார்பாக வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 'கட்சியில், அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டதால், வழக்கில் எழுப்பிய கோரிக்கைகள் காலாவதியாகி விட்டன' என, பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. சுரேன், ராம்குமார் ஆதித்தன் தரப்பில், 'நாங்கள் கட்சி உறுப்பினர்கள் தான் என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகே, வழக்கு தொடர தனி நீதிபதி அனுமதி அளித்தார். எங்களின் வழக்குகள் காலாவதியாகவில்லை' என, வாதிட்டனர். தள்ளிவைப்பு இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, அ.தி.மு.க., தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடருவதற்கு, சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.