மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்., இறுதியில் அல்லது நவ., முதல் வாரத்தில் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம், தேர்தல் கமிஷன் தேர்தல் தேதிகளை அறிவிக்கலாம்.தற்போது, பா.ஜ., - சிவசேனா,- தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் உள்ளனர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணிக்கு அதிகளவில் வெற்றி கிடைக்கவில்லை. உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா,- சரத் பவார் பிரிவு தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி, அதிகளவில் வெற்றி பெற்றன.மொத்தம், 288 தொகுதிகளை உடைய சட்டசபையில், குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும். தற்போது, பா.ஜ.,விடம் 106 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். 'நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், இதே எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ள முடியுமா?' என்றால், 'நிலைமை சரியில்லை' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.'இங்கு 70க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ.,விற்கு வெற்றி கிடைக்கும்' என, கட்சியின் ரகசிய சர்வே தெரிவிக்கிறதாம். ஆனால், 'முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் கட்சி அதிகமான இடங்களை வெல்லும்' என, அவருடைய கட்சியினர் சொல்கின்றனர். 'எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், 'எங்கள் கூட்டணிக்கு 180 தொகுதிகள் கிடைக்கும்; ஆட்சியை அமைக்கப் போவது நாங்கள் தான்' என, சொல்லி இருக்கிறார். லோக்சபா தேர்தலில் இழப்பை சந்தித்த பா.ஜ., கூட்டணி, ஆட்சியை தக்க வைப்பது கேள்விக்குறியாக உள்ளது என்பது தான் உண்மை!