திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதையடுத்து, சுத்தமல்லி போலீசார் புதிய குற்றவியல் சட்டம் 271, 272 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரி, அதன் உரிமையாளர், ஓட்டி வந்தவர் விபரம் சேகரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட இடத்தை அ.தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் பார்வையிட்டனர். குப்பைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் பொது சுகாதார உயர் அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவில்லை. அபாயகரமான மருத்துவக்கழிவுகள் என்பதால் திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடியில் செயல்படும் அசெப்டிக் எனப்படும் அபாய மருத்துவ கழிவுகளை எரிக்கும் மையத்தின் மூலமே எரிக்க வேண்டும்.மாறாக மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டினால் அங்கிருந்து வெளியாகும் கழிவுநீர் மீண்டும் அருகில் உள்ள கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் சேரும் அபாயமும் உள்ளது.
லாரியில் நானே செல்வேன்: அண்ணாமலை ஆவேசம்
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவு: காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கேரள எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.கேரள கம்யூனிஸ்ட் அரசுடன், தி.மு.க., அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அம்மாநில பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பை கிடங்காக தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இக்கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டிய சோதனை சாவடிகள், வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதை கண்டும், காணாதது போல் இருக்கும் தி.மு.க, அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்திக் கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதல்வர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும் இதை தடுக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.முழுக்க தி.மு.க., அரசுக்கு தெரிந்தே இவை நடைபெறுகின்றன. உடனடியாக, கேரள மாநில குப்பை கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதை தி.மு.க., அரசு தடுக்க வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், 2025 ஜனவரி முதல் வாரத்தில், மக்களை திரட்டி, இந்த உயிரியல் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.