மேலும் செய்திகள்
பீஹாரில் பேசிய கருத்துகளை தமிழகத்தில் பேசுவாரா மோடி?
11 hour(s) ago | 15
இமயமலை தொடரில் உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது கிரவுஞ்ச மலை. மொத்தம், 12 ஆயிரம் அடி உயரமுள்ள மலையில் உச்சியில் இருக்கிறது கார்த்திகேய சுவாமி கோவில். இந்த கார்த்திகேய சுவாமி வேறு யாரும் இல்லை; தமிழகத்தில் அறுபடை வீடு கொண்ட நம்ம முருகப் பெருமான்தான்.மாநில அரசு முயற்சி
கார்த்திகேய சுவாமிக்கும், தென் மாநிலங்களுக்குள் உள்ள தொடர்பை வெளிப்படுத்தவும், தென் மாநிலங்களின் முருக பக்தர்கள், கிரவுஞ்ச மலையை நோக்கி வர வைக்கும் முயற்சியில், உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.இதற்காக, தமிழக ஆதீனங்களை எல்லாம் அழைத்து, கார்த்திகேய சுவாமிக்கு, 108 சங்காபிேஷக நிகழ்ச்சியை, கடந்த மே 16ல், முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை அன்று நடத்தியது. கோவை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆரூர் சுப்பிரமணிய குருக்கள் தலைமையில், 20 பேர் குழுவினர் சிறப்பு யாகசாலை பூஜை, சங்காபிேஷகத்தை நடத்தினர். கார்த்திகேய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.பரவச அனுபவம்
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மைய பகுதியில் இருந்து, 60 கி.மீ., பயணம் சென்றால், கனக சவுரி என்ற கிராமத்தை அடையலாம். அங்கிருந்து, 3.5 கி.மீ., துாரம், டிரெக்கிங் என்ற மலைப் பயணம் மேற்கொண்டு, கார்த்திகேய சுவாமி கோவிலை சென்றடையலாம். கோவில் அருகே மட்டும், 0.5 கி.மீ., துாரம் படிக்கப்பட்டில் பயணிக்க வேண்டும்.
உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை கூடுதல் செயலராக செயல்பட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த ரவிசங்கர் கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலத்தில், இமயமலை தொடரில் கிரவுஞ்ச பருவத மலை உள்ளது. இமயமலையில் எல்லா மலைகளையும் பார்க்கும் வாய்ப்புள்ள இடங்களில் இந்த இடமும் ஒன்று. இங்கிருந்து பனி படர்ந்த எல்லா மலைகளையும் பார்க்க முடியும். திருவிளையாடல் புராணத்தில் நாம் படித்தபடி, தாய், தந்தையிடம் கோபித்துக் கொண்டு, கார்த்திகேய சுவாமி இங்கு தவம் புரிந்தார்; அதன்பின்தான், தமிழகம் சென்றதாக ஐதீகம். தமிழகத்தின் ஆன்மிக சிறப்புகளையும், இங்குள்ள கார்த்திகேய சுவாமி கோவில் சிறப்புக்களையும் பரிமாறிக் கொள்ளும் வகையில், 108 சங்காபிேஷக நிகழ்ச்சி நடந்துள்ளது. திருப்பரங்குன்றம், சுவாமிமலை கோவில்களில் இருந்து எடுத்து வந்த வஸ்திரங்கள், கார்த்திகேய சுவாமிக்கு சார்த்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதுபோல், கார்த்திகேய சுவாமிக்கு சார்த்தப்பட்ட வஸ்திரங்கள், தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் உள்ள முருகனுக்கும் சார்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கோவிலை பிரபலப்படுத்த வேண்டும் என்பது சுற்றுாலத்துறையின் முயற்சி. உத்தரகண்ட் வரும் தமிழக பக்தர்கள், கார்த்திகேய சுவாமி கோவிலுக்கு வர வேண்டும். இது நல்ல அனுபவமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
மலைப்பாதையில் நடந்து செல்ல முடியாதவர்கள், டோலி எனப்படும் பல்லக்கில் செல்லலாம்; குதிரை சவாரியாகவும் செல்லலாம். இதற்கு, காலம், ஆளுக்கேற்ப கட்டணம் வசூலிக்கின்றனர். விரைவில், ரோப் கார் வசதி செய்யப்படும் என, சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக முருக பக்தர்களை வரவழைக்க முயற்சிக்கும் உத்தரகண்ட் சுற்றுலாத்துறை, கோவிலில் தமிழ் தெரிந்த அர்ச்சகர் அல்லது தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும். தமிழக, தென் மாநில பக்தர்களுக்கு கோவிலின் சிறப்பை எடுத்துக் கூறவும், தமிழில் அர்ச்சனைகள் செய்ய வழி வகை செய்யலாம். அப்படி செய்தால், சுற்றுலாத்துறையின் நோக்கம் விரைவில் நிறைவேறும்.
ருத்ரபிரயாக் மாவட்டத்தின் மைய பகுதியில் இருந்து, 4 கி.மீ.,ரில் உள்ளது, 1,000 ஆண்டுகள் பழமையான கோடேஸ்வரர் மஹாதேவ் கோவில். பஸ்மாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து, தான் யார் தலைமீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாகும் வகையிலான சாபத்தை பெற்றான். ஒரு கட்டத்தில் வரம் கொடுத்த சிவன் மீது கை வைக்க முயற்சிக்க, சிவன் இங்குள்ள குகைக்குள் அமர்ந்து தியானம் செய்ததாகவும், அதன்பின் விஷ்ணு பகவான், பஸ்மாசுரனை பேச்சால் மயக்கி, அவன் தலை மீதே கை வைக்க வைத்து, அவனை சாம்பலாக்கியதாக வரலாறு. அந்த இடம் தான் கோடேஸ்வரர் மஹாதேவ் கோவிலாக உள்ளது. குகைக்குள் சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். மலையில் இருந்து நீர் சொட்ட, அதை பிடித்து, குகைக்குள் இருக்கும் சிவனுக்கு பக்தர்கள் அபிேஷகம் செய்கின்றனர். ருத்ரபிரயாக் மாவட்டத்தில், பனிமலையில் இருந்து உருகி வரும் நீர், ஒருபுறம் அலக்நந்தா நதியாகவும், மற்றொருபுறம் நதியாகவும் வந்து, தேவி கோவில் அருகே சங்கமிக்கிறது. சங்கமிக்கும் சப்தமும், மலையில் உருண்டு வந்த கற்கள் அழகிய வடிவில் நிரம்பி இருப்பதும், சுற்றியுள்ள அழகிய மலையும், தேவி, சிவன் கோவிலும் ரம்மியமான சூழலாக உள்ளது. இதுதான் கங்கை உருவாகும் இடம் என்பதால், பக்தர்கள் அதிகம் வந்து, நீராடி, மலர் துாவி, கங்கா ஆரத்தி எடுத்து, வழிபாடு செய்கின்றனர். உத்தரகண்ட் செல்வோர் இந்த இடங்களுக்கும் போகலாம்; பரவசம் பெறலாம்.
11 hour(s) ago | 15