உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  த.வெ.க.,வில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்: விஜயை சந்தித்து 2 மணி நேரம் பேச்சு

 த.வெ.க.,வில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்: விஜயை சந்தித்து 2 மணி நேரம் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைகிறார். இதற்காக, நேற்று அக்கட்சி தலைவர் விஜயை, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். இருவரும் இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினர். ஆலோசனை அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்குமாறு குரல் கொடுத்து, காலக்கெடு விதித்தார், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதையடுத்து, அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்ததால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கோபமடைந்து, கட்சியில் இருந்தே செங்கோட்டையனை நீக்கினார். இதையடுத்து, நேற்று காலை தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், சென்னை போயஸ் கார்டனில் உள்ள த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, ஆதவ் அர்ஜுனா காரில் இருவரும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள த.வெ.க., தலைவர் விஜய் வீட்டுக்கு சென்றனர். அங்கு விஜயுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். த.வெ.க.,வில் செங் கோட்டையனுக்கு அமைப்பு செயலர், அவை தலைவர், முதன்மை பொதுச்செயலர் ஆகிய பதவிகளில் ஏதாவது ஒன்றை வழங்க, விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால், பொதுச்செயலர் என்ற அடையாளம் வரும் பதவி வேண்டாம் என, செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. நிர்வாகிகள் பட்டியல் விஜயை சந்தித்தபோது, தன்னுடன் த.வெ.க.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டியலையும், விஜயிடம் ஒப்படைத்தார். அவர்களுக்கும் விரைவில் பதவி வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், செங்கோட்டையன் கலந்து கொண்டு, த.வெ.க.,வில் அதிகாரபூர்வமாக இணையவுள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் அமைச்சர், மதுரை மாவட்ட முன்னாள் அமைச்சர், ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர் என பிரபலங்கள் சிலர், த.வெக.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க., கொடியை தன் காரில் இருந்து இறக்கி விட்டார். திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் ராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலர் ஒருவர் ஆகியோரையும் த.வெ.க.,வில் சேர்க்க பேச்சு நடத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., - பா.ஜ., கட்சிகளின் கடைசி கட்ட முயற்சி தோல்வி கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த செங்கோட்டையனை, தி.மு.க., மூத்த அமைச்சர்கள் இருவர் தொடர்பு கொண்டு, 'தி.மு.க.,வுக்கு வாருங்கள்; அமைப்பு செயலர், மாவட்டச் செயலர் பதவி தர, முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார்' என கூறியுள்ளனர். அவர்களிடம், 'த.வெ.க.,வில் இணையும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்' என, திட்டவட்டமாக செங்கோட்டையன் கூறி விட்டார். நேற்று எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதற்காக, சபாநாயகர் அப்பாவு அறைக்கு செங்கோட்டையன் வந்தபோது, அவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார். முதல்வர் தரப்பில் சொல்லப்பட்ட முக்கிய தகவலை கூறினார். அதற்கு செங்கோட்டையன் மவுனத்தை மட்டுமே பதிலாக கூறினார். இதற்கிடையே, டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும், மொபைல் போனில் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு, 'அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்; டில்லி வாருங்கள். 'பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்; பா.ஜ.,வில் சேருங்கள்' என, கூறியிருக்கிறார். அதற்கும் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து விட்டார். எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா அ.தி.மு.க.,வில் அமைப்பு செயலராகவும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலராகவும் இருந்த செங்கோட்டையன், அக்கட்சி சார்பாக ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். தற்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், நேற்று தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக, நேற்று காலை சென்னை தலைமை செயலகத்துக்கு வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தை அப்பாவு பெற்றுக் கொண்டார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வந்தபோது, செங்கோட்டையன் காரில் அ.தி.மு.க., கொடி கட்டப்பட்டு இருந்தது. சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய பின், அவரது காரில் இருந்த அ.தி.மு.க., கொடி அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை