| ADDED : ஜூன் 08, 2024 04:34 AM
பாகூர் : பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது, 12 மணி நேரம் மின்சாரம் தடைபட்டதால், பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.பாகூர், சேலியமேடு, குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, அரங்கனுார் உள்ளிட்ட கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டால், மீண்டும் வருவதற்கு பல மணி நேரம் ஆகிகிறது.நேற்று முன்தினம் இரவு பாகூர் பகுதியில் இடி மின்னனுடன் பெய்த கன மழையின் போது, இரவு 10:00 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. நேற்று காலை 10:00 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால், பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.இதனிடையே, காலை 10.30 மணியளவில் மின்சாரம் வந்தது. இந்நிலையில், பாகூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை குறித்து தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், பாகூர் தொகுதி மக்களுடன் சென்று, மின் துறை கண்காணிப்பு பொறியாளரை சந்திந்து புகார் மனு அளித்தார்.அதில், லேசான மழை பெய்தாலே பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் கம்பி அறுந்து விழுந்தது பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டு விடுகிறது.பாகூரில் பல்வேறு அரசு துறை அலுவலங்கள் இயங்கி வரும் நிலையில், அலுவலக பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொது மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் நிகழாமல், மின் பாதையை உடனடியாக சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.