உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் என மோசடி ரூ.3 கோடி மதிப்பு பொருட்கள் பறிமுதல்

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் என மோசடி ரூ.3 கோடி மதிப்பு பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி, கருவடிக்குப்பம் நாகம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கோகிலா, 38; செவிலியர். ஆன்லைனில் வர்த்தகம் செய்து லாபம் பார்க்கலாம் என, பேஸ்புக்கில் தேடினார். அதில் வந்த விளம்பரத்தை பார்த்து, தன் முகவரி, தொலைபேசி எண்ணை பதிவிட்டார்.இதையடுத்து, கோகிலாவை கடந்தாண்டு செப்., மாதம் பெங்களூரில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன், அல்கோ மாஸ்டர் டிரேடிங் கம்பெனியில் வேலை செய்வதாகவும்.தங்களின் ஏ.ஐ., தொழில்நுட்ப சாப்ட்வேரில் முதலீடு செய்தால், அதுவே டிரேடிங் செய்து தினசரி 8,000 வரை லாபம் அளிக்கும் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.நம்பிய கோகிலா, மர்ம நபர்கள் அனுப்பிய 67 லிங்க்குகளில் பல தவணைகளில், 18 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்துள்ளார். லாப பணம் ஏதும் வரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகிலா, ஜூலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார், மோசடி கும்பலின் வங்கி பரிவர்த்தனை, வாட்ஸாப், இணையதள முகவரிகளை ஆராய்ந்தனர். மோசடி கும்பல், நெய்வேலி மற்றும் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று, அங்கு பதுங்கியிருந்த மோசடி கும்பலை சுற்றிவளைத்தனர். அவர்கள், கேரளாவை சேர்ந்த பிரவீன், 31, உள்ளிட்ட ஏழு பேர் என, தெரிய வந்தது.இந்த கும்பல், நெய்வேலி, நாமக்கல், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் என்.டி.எஸ்., குரூப் ஆப் கம்பெனி பெயரில் கால் சென்டர் நடத்தி வந்துள்ளனர்.அதில், 200க்கும் மேற்பட்டோரை பணிக்கு அமர்த்தினர். தினசரி பலருக்கு போன் செய்து, தங்களின் ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் இணையதளத்தில் முதலீடு செய்ய ஆசை காட்டி, பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.கம்பெனிகளில் ஆய்வு செய்த போலீசார், அங்கிருந்த நான்கு சொகுசு கார்கள், ஒரு வேன், விலை உயர்ந்த பைக், நுாற்றுக்கும் மேற்பட்ட கம்யூட்டர்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்.மோசடி கும்பல், 2014 முதல் துபாய், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கால் சென்டர்கள் அமைத்து, 200க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து, பணம் வசூலித்து ஏமாற்றி வந்துள்ளனர். மோசடிகள் அனைத்தும் துபாயை தலைமையிடமாக கொண்டு செய்யப்பட்டு உள்ளன.இதில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் துபாயில் உள்ளனர். இந்த கும்பலின் மூன்று வங்கி கணக்குகளில், ஒன்பது மாதங்களில் மோசடி பணமாக 56 கோடி ரூபாய் வந்துள்ளதாக, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்தார்.

சொகுசு பங்களாக்கள்

பொதுமக்களை ஏமாற்றிய பணத்தில் பெங்களூரில் நீச்சல் குளம் வசதியுடன் சொகுசு பங்களா, நெய்வேலியில் பல ஏக்கர் பரப்பளவு இடத்தில் ஹைடெக் வசதிகளுடன் என்.டி.எஸ்., குருப் ஆப் கம்பெனி பெயரில் மூன்று அலுவலக கட்டடம், ஏற்காடு, புதுச்சேரி மற்றும் கொடைக்கானலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசார்ட் வாங்கியுள்ளனர். நாடு முழுதும் மோசடி செய்து சம்பாதித்த, 2,000 கோடிக்கும் அதிகமான பணத்தை துபாயில் பல்வேறு தொழிலில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் பதுங்கி உள்ள நவ்ஷத்கான் அகமதுவை கைது செய்ய இந்தியா சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதால், அமலாக்கத்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை