| ADDED : மார் 28, 2024 04:27 AM
புதுச்சேரி : சாலையோரம் மதுபோதையில் படுத்திருந்தவரிடம் இருந்து 1 சவரன் தங்க செயின், மணி பர்ஸ் திருடிச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், வானுார் உப்புவேலுார், பிள்ளையார்கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 44; விவசாயி. கடந்த 25ம் தேதி திலாஸ்பேட்டை, வீமன் நகரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அங்கிருந்து சென்று மேட்டுப்பாளையம் சாராயக்கடையில் சாராயம் குடித்தார். அளவுக்கு அதிகமாக குடித்ததால், நிலை தடுமாறி சாராயக்கடை அருகே சாலையோரம் மயங்கி கிடந்தார். அப்போது, விஸ்வநாதன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க செயினை மர்ம நபர் அறுத்து கொண்டு, மணி பர்சையும் திருடிச் சென்றார். இது தொடர்பாக விஸ்வநாதன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சாலையோரம் படுத்திருந்த விஸ்வநாதனிடம் இருந்து செயின் அறுத்து கொண்டு, மணி பர்ஸ் திருடியது, முத்திரைப்பாளையம், கோவிந்தன்பேட், அணைக்கரை வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருள்குமார், 30; என தெரியவந்தது. அருள்குமாரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.