| ADDED : ஜூன் 14, 2024 06:14 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தெரு நாய்களின் தொல்லை பெருகி வருகிறது. பொது இடத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.இந்நிலையில், காமராஜர் தொகுதி, வெங்கட்டா நகர், 4வது குறுக்கு தெருவில், நேற்று முன்தினம் 10க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் ஒன்றை ஒன்று கடித்து கொண்டு ரத்த காயங்களுடன் ஓடின. இதனால், அந்த வழியாக சென்றவர்கள் நாய்கள் சண்டை போடுவதை பார்த்து அச்சமடைந்தனர். அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்பகுதியில் தினமும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை பிடிப்பதற்கு உழவர்கரை நகராட்சியினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.