புதுச்சேரியில் ரூ.576 கோடியில் புதிய சட்டசபை குரூப்-பி பணியிடத்தில் எம்.பி.சி., பிரிவுக்கு இட ஒதுக்கீடு சபாநாயகர் செல்வம் தகவல்
புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம், ரூ.576 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.அவர், கூறியதாவது:புதுச்சேரியில் புதிய தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கான கோப்பு, கவர்னர் கைலாஷ்நாதன் கையொப்பமிட்டு, ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டசபை வளாகமானது, ரூ.576 கோடியில் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மொத்தம், 15 ஏக்கர் பரப்பளவில், தலைமை செயலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் அமைப்பதற்கான, கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடன், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்.அதேபோல் கடந்த 2022ம், ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் குரூப்-பி, பணியிடங்களான, வேளாண் அதிகாரி, மோட்டார் வாகன துணை ஆய்வாளர் உள்ளிட்ட, 9 துறைகளில், 180 பதவிகளில் எம்.பி.சி., பிரிவுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.நீண்ட காலமாக கிடப்பில் இருந்து இந்த கோப்புகளுக்கு, ஒப்புதல் அளித்த புதிய கவர்னர் கைலாஷ்நாதனுக்கு நன்றி. புதிய கவர்னர் அரசுடன் இணக்கமாக இருப்பதால், அரசு பணிகள் இனி தொய்வின்றி நடக்கும்.மாநில அந்தஸ்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. விரை வில் முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.அரசுக்கு சொந்தமான இடத்தை ஒரு அங்குலம் கூட, யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட ஓட்டல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இடத்தை இடிப்பதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தை விட, புதுச்சேரியில் மின் கட்டணம் குறைவாக இருக்கிறது. முதல்வரின் தனிச்செயலர் மற்றும் அரசு கொறடா மோதல் குறித்து, முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். இலவச அரிசி வழங்கும் டெண்டருக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கி விட்டார். தலைமை செயலரும் ஒப்புதல் அளித்து விட்டார். அடுத்த இரு ஆண்டுகளிலும், இந்த அரசு சிறப்பாக செயல்படும். தனித்தனி அதிகார மையங்களால் சிக்கல்
கடந்த மூன்று ஆண்டு காலமாக தலைமை செயலர், கவர்னர், முதல்வர் என்ற மூன்று அதிகார மையங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது அனைத்து நிர்வாக மையங்களும் ஒன்றிணைந்து ஒரே அரசாக செயல்படுகிறது. புதிய கவர்னர் இணக்கமாக செயல்படுவதன் காரணமாக, நல்ல நிர்வாகம் நடக்கும் என்ற, நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு சபாநாயகர் கூறினார்.