| ADDED : ஆக 01, 2024 06:25 AM
அரியாங்குப்பம்: மாங்ரோவ் காடுகளை தீ வைத்து எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதியில் கடந்த 29ம் தேதி இரவு கருவேல மரங்கள், மாங்ரோவ் மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த மரங்களை மர்ம கும்பல் ஏதோ ஒரு காரணத்திற்காக தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.தீப்பிடித்து எரிந்த மரங்களை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அணைத்ததால், அப்பகுதியில் இருந்த மற்ற மரங்கள் காப்பாற்றப்பட்டது. இச்சம்பவம் வீராம்பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.மரங்கள் எரிந்த இடத்தை நேற்று வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மாங்ரோவ் காடுகளை தீ வைத்து எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறையினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார். கண்காணிக்க வேண்டும்
வீராம்பட்டினத்தில் இருந்து தேங்காய்த்திட்டு முகத்துவாரம் பகுதிக்கு செல்லும் சாலையில் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல், மது அருந்தி பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதையில், காய்ந்த மரங்களை தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த பகுதியில், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும்.