உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச காய்கறி விதை தொகுப்பு வழங்கும் பணி

இலவச காய்கறி விதை தொகுப்பு வழங்கும் பணி

புதுச்சேரி: ஆடிப்பருவத்தில் இலவச காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை தோட்டக்கலை பிரிவின் மூலம் புதுச்சேரி பகுதியில் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு, உற்பத்தி திறன் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகின்றது.அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பகுதியில் நகர, கிராமப்புற மக்களுக்கு தேவையான பசுமையான, தரமான காய்கறிகளை அவர்களே சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க 200 ரூபாய் மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு ஆடிபருவத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றது.2024ம் ஆண்டிற்கான ஆடிப்பருவத்தில் இலவச காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற் நடந்தது. வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார் முன்னிலை வகிக்க, முதல்வர் ரங்காமி பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார், தோட்டக்கலை பிரிவு கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகீர் உசைன், துணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு, வேளாண் அமைச்சரின் தனி செயலர் மனோகரன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முண்டியடித்த கூட்டம்

காய்கறி விதை தொகுப்பினை சிலருக்கு வழங்கியதும் முதல்வர் ரங்கசாமி அங்கிருந்து நகர்ந்தார். அதை தொடர்ந்து காய்கறி தொகுப்பினை பெற சட்டசபை பாதுகாவர்கள், பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி