| ADDED : ஜூன் 29, 2024 06:30 AM
புதுச்சேரி: சோலை நகரில் துர்நாற்றம் வீசுவது தொடர்பாக பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பொது கழிவறையில் பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசுவதாகவும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க, தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ் குமாரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அவர், புதுச்சேரி நகராட்சி கமிஷ்னர் கந்தசாமி, பொதுப்பணித்துறை பொது சுகாதாரப் பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோரிடம் அப்பகுதியில் ஆய்வு செய்தார்.தொடர்ந்து அதிகாரிகளிடம், பாதாள கழிவுநீர் சாக்கடை இணைப்பின் மூலம் ஏதேனும் துர்நாற்றம் வருகிறதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவ சுப்ரமணியம், சுகாதாரத்துறை அதிகாரி ஆரத்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கசாப்பு காரன் தோப்பு பகுதிக்கு பாதாள கழிவுநீர் தொட்டி அமைக்கவும்,சோலை நகர், தெற்கு மீனவர் பஞ்சாயத்தார், அங்கு உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கர்ம காரியம் செய்வதற்கு ஏற்ற கட்டடம் கட்டவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.