| ADDED : ஆக 02, 2024 01:16 AM
புதுச்சேரி: சட்டசபையை முற்றுகையிட சென்ற பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மீண்டும் வேலை வழங்கி, 10,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதை நடைமுறைப்படுத்த கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழுவினர் 1ம் தேதி சட்டசபையை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.அதன்படி நேற்று காலை 10 மணிக்கு சட்டசபையை முற்றுகையிடுவதற்காக ஜென்மராக்கினி ஆலயம் அருகே ஒன்று திரண்டனர். பின் சட்டசபை நோக்கி ஊர்வலாக சென்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வீகன், சத்தியவதி, வினோத், மணிவண்ணன் தலைமை தாங்கினர். ஊர்வலம் மதியம் 12 மணியளவில் நேரு வீதி- செஞ்சி சாலை வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றபோது பெரியக்கடை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆவேசமடைந்த ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் பெரியக்கடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஊழியர்கள் மறியலை விலக்கி கொள்ளவில்லை. அதை தொடர்ந்து 12.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர்.தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை தொடர்பாக முறையிட்டனர்.