| ADDED : ஜூலை 30, 2024 05:12 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் நுாதன முறையில் ரூ.1.01 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.காரைக்காலை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறினார். தங்களுக்கு வந்துள்ள பார்சலில் சுங்க கட்டணம் இல்லாமல் உள்ளது. அதனால், கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிரட்டினார். அதற்கு பயந்த அவர், 45 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார். கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவருக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் பேசுவதாக மர்ம நபர் ஒருவர் பேசி, மருத்துவ செலவிற்கு பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர், 26 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.முதலியார்பேட்டையை சேர்ந்தவர் தங்கபிரதீப், இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி பேசுவதாக கூறினார். கிரிடிட் கார்டு தொகையை அதிகரிக்க கார்டின் விபரங்கள், மற்றும் மொபைல் போனுக்கு வந்து ஓ.டி.பி., எண்ணை கொடுத்தார். அடுத்த சில சிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து, 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.