| ADDED : மே 30, 2024 04:47 AM
புதுச்சேரி: ஜூஸ் கடையில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் திருடிய கேரளா நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோரிமேடு, காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் விஜயராஜ், 30; தனது வீட்டின் முன்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த சாதிக் அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் வந்து வேலை கேட்டார். விஜயராஜ் தனது கடையில் சாதிக் மற்றும் அவரது மனைவியை வேலைக்கு அமர்த்தினார். இருவரின் அடையாள அட்டைகளை கொடுக்கவில்லை.கடந்த 22ம் தேதி விஜயராஜ் வெளியூர் சென்றதால், சாவியை சாதிக்கிடம் கொடுத்து விட்டு சென்றார்.அன்று இரவு கடையின் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை, விஜயராஜ் தனது மொபைல்போன் மூலம் பார்த்தபோது, சாதிக் கடை மேஜை மீது வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள லேப் டாப்பை எடுத்து கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. உடனடியாக கடைக்கு திரும்பிச் சென்று பார்த்தபோது, சாதிக் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாதிக்கை தேடி வருகின்றனர்.