| ADDED : ஜன 11, 2024 04:09 AM
புதுச்சேரி: ரேஷன் கடைகளை திறக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். அவர் கூறியதாவது; புதுச்சேரியில் கடந்த காங்., தி.மு.க., ஆட்சியில் ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. மானிய விலையில் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையும் நிறுத்தப்பட்டது.மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டப்படி, புதுச்சேரியில் 62.5 சதவீத ஏழை மக்களுக்கு, மத்திய அரசு மானிய உதவியுடன் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட வேண்டும். அத்திட்டத்தை புதுச்சேரி அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.ரேஷன் கடை ஊழியர்களுக்கு 50 மாதங்களுக்கு மேல் சம்பளம் வழங்கவில்லை. இந்திய அளவில் ரேஷன் கடைகள் திறக்காத ஒரே மாநிலம் புதுச்சேரி. ரேஷன் கடைகள் இல்லாததால் ஏழை எளிய மக்கள் சிரமப்படுகின்றனர்.மக்கள் நலனுக்காக ரேஷன் கடைகளை உடனடியாக திறக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தி, மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, நாளை 12ம் தேதி குடிமைப்பொருள் வழங்கல் துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என்றார்.