சேதராப்பட்டு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வில்லியனுார்: சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.சேதரப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மேல்நிலைப் பள்ளி சமுதாய நலப்பணி திட்டம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.விழாவில் முன்னதாக வில்லியனூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி சமுதாய நலப்பணித்திட்ட ஆசிரியர்கள் சித்ரா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் செய்தனர். ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.