| ADDED : ஆக 29, 2026 10:52 PM
புதுச்சேரி: மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டுமென, சட்டசபையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பேசினார். இதுகுறித்து அவர், மேலும் பேசியதாவது: மீன்பிடி தடைகால நிவாரணத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களுக்கான ஈமச்சடங்கு நிதியுதவியை ஓரிரு நாளில் வழங்க வேண்டும். வீராம்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும். அரியாங்குப்பத்தில் மின் மயானம் அமைக்க வேண்டும். கொம்யூன் பஞ்சாயத்தில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். பாரதியார் பல்கலை கூடத்தை கலை, அறிவியல் கல்லுாரியாக மாற்ற வேண்டும். அரியாங்குப்பம் முதல் அரிக்கமேடு வரை ஆற்றை ஆழப்படுத்த வேண்டும். முருங்கப்பாக்கத்தில் உள்ள அரிக்கமேடு அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வராக நதியை மீட்க வேண்டும். அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நலவழி மையமாக தரம் உயர்த்த வேண்டும். சிமெண்ட் சாலை அமைக்கும் போது குறிப்பிட்ட இடைவெளியில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.