உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருட்களே குற்றங்களுக்கு காரணம் தலைமை நீதிபதி ஆனந்த் பேச்சு

போதை பொருட்களே குற்றங்களுக்கு காரணம் தலைமை நீதிபதி ஆனந்த் பேச்சு

புதுச்சேரி : அதிகரித்து வரும் குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக போதைப்பொருட்களே உள்ளதாக புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் பேசினார். லாஸ்பேட்டை, தாகூர் அரசு கல்லுாரியின் சட்ட சேவை மையம், தேசிய, மாநில மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணையங்களுடன் இணைந்து, 'போதைப் பொருள் இல்லாத இந்தியா' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது.கருத்தரங்கை தொடங்கி வைத்த புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் பேசியதாவது: போதைப் பொருள் இன்று, உலகளாவிய பிரச்னையாக உள்ளது. 126 வகை போதைப் பொருள்கள் தடை செய்யப்பட்டவை. இப்போது, கருத்தரித்தல் மையம் அதிகரித்துள்ளது. அதற்குக் காரணமே போதைப் பொருள்தான். முன்பெல்லாம், குழந்தைப் பேறுக்காக அரச மரத்தைச் சுற்றுவார்கள். பிறகு குழந்தை பிறகும். வழக்கமாக பெரும்பாலும் ஆண்கள் மது குடிப்பார்கள். இப்போது ஒரு சில பெண்களும் மதுகுடிக்க கடைகளுக்குச் செல்கிறார்கள். பாலின சமத்துவம் என்பது இதில் இருக்கக்கூடாது. மற்ற குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக போதைப்பொருள் இருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 30, 40 போதைப்பொருள் வழக்குகள் வருகின்றன. 18 வயது முதல் 23 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள்தான் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். போதைப் பொருள் மாபியாக்கள் இதை மாணவர்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். போதைப் பொருள் உட்கொள்வதால் நேரம், திறமை, உழைப்பு எல்லாம் வீணாகிறது. உடல் உறுப்புகள் அனைத்தும் பழுதடைந்து 5 முதல் 10 ஆண்டுகளில் ஆயுள் முடிந்துவிடுகிறது. இதனால், அவர்களது பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்' என்றார். தொழிலாளர் நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் அம்பிகா பேசுகையில், போதைப் பொருளை பயன்படுத்துவோர் தெரியாமல் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. இப்போது போதையில்லா இந்தியாவை உருவாக்கும் வகையில்தான் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்' என்றார். மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலர் ரமேஷ், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் சரவணன், தாகூர் அரசு கல்லுாரி முதல்வர் கருப்பசாமி உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !