மார்பு நோய் மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் திறப்பு
புதுச்சேரி : கோரிமேட்டில் உள்ள அரசு மார்பு நோய் மருத்துவனையில் காசநோய் பரிசோதனையை அதிகரிக்க டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி, ரூ. 1.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட நான்கு கையடக்க எக்ஸ்ரே இயந்திரங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை செயலர் ஜெயந்தகுமார் எக்ஸ் ரே, இயக்குநர் செவ்வேள், திட்ட இயக்குநர் கோவிந்தராஜன், கோரிமேடு அரச மார்பு நோய் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு காசநோயை எளிதாகவும், விரைவாகவும் கண்டறிய முடியும். கையடக்க எக்ஸ்ரே இயந்திரங்கள் காசநோய் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் வீடு, வீடாக சென்று பரிசோதிக்க களத்தில் பயன்படுத்தப்படும். இதன் மூலம் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத புதுச்சேரி என்ற இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.