பழுதடைந்த ரோந்து படகு சீரமைப்பு காரைக்காலில் டி.ஜ.ஜி., ஆய்வு
காரைக்கால்: காரைக்காலில் பழுதடைந்திருந்த ரோந்து படகு சீர்செய்யப்பட்டு டி.ஜ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையிலான குழுவினர் படகில் சென்று ஆய்வு செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில் கடலோர காவல் நிலையம் கடந்த 2008ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடல் வழி பாதுகாப்பை உறுதிப்படுத்த கடலோர காவல் நிலையத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு அதிவிரைவு ரோந்து படகு ஒன்றை மத்திய அரசு வழங்கியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோந்து படகு பழுது ஏற்பட்டதால் இயங்காமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சீனியர் எஸ்.பி., லட்சுமி சௌஜன்யா ரோந்து படகை பழுது நீக்க நிதி ஒதுக்கினார். அதன்பின், கேரளாவை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் படகு சீரமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பின் நேற்று முன்தினம் புதுச்சேரி டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு, அதி விரைவு ரோந்து படகின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இக்குழுவின் உறுப்பினர்களான சீனியர் எஸ்.பி., லட்சுமி சௌஜன்யா, மாவட்ட எஸ்.பி.,க்கள் சுபம் கோஸ், முருகையன், இந்திய கடலோர காவல் படை பொறியாளர் ஆனந்த் குமார் சிங், இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் ரோந்துப் படகில் கடலில் சென்று அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, படகின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தனர்.