வீடுர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் : கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
திருக்கனுார்: வீடூர் அணை திறப்பு காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது பரவரலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டம், வீடூரில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள வீடூர் அணை வேகமாக நிரம்பி வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியதால், அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் நேற்று காலை 31.300 அடி நிரம்பியது. அணைக்கு விநாடிக்கு 4,352 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி மதியம் 12:00 மணி முதல் விநாடிக்கு 657 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இது 1:00 மணிக்கு 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கைக்கிலப்பட்டு கிராமங்களில் உள்ள படுகையணைகள் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை மற்றும் போலீசார் படுகையணை பகுதிகளை ஆய்வு செய்து, ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் எச்சரிக்கை
வீடூர் அணை திறக்கப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கொடாத்துார், கைக்கலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரபாளையம், வம்பாப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், ஆரியப்பாளையம் புதுநகர், பொறையாத்தம்மன் நகர், கோட்டைமேடு, மங்களம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் நோணாங்குப்பத்தில் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படகின்றனர். மேலும், ஆற்றில் இறங்குவது, மீன்பிடிப்பது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அவசர உதவிக்கு
பேரிடர் தொடர்பான புகார் இருப்பின் 1077, 1070, 112 மற்றும் 94889 81070 வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.