| ADDED : மார் 15, 2024 05:52 AM
புதுச்சேரி: பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர். நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தமிழாசிரியர் கிருஷ்ணசாமி , அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை, காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி மாணவியை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின் பெற்றோர் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் புகார் கொடுத்தனர். இதனை விசாரித்த கல்வித்துறை அதிகாரிகள், தமிழாசிரியர் கிருஷ்ணசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி ஆசிரியர் கிருஷ்ணசாமியை பணியிடை நீக்கம் செய்து, சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் உத்தரவிட்டார்.பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் ஆசிரியர் கிருஷ்ணசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியரை தேடிவருகின்றனர்.