பெருமாள் கோவில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் துவங்கியது. மார்கழி மாதந்தோறும் பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசிக்கு, 10 நாட்களுக்கு முன்பு, பகல் பத்து உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரி, காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று பகல் பத்து உற்சவம், விமரிசையாக துவங்கியது.காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் உள்புறப்பாடு நடந்தது. அதேபோல முத்தியால்பேட்டை, தென்கலை சீனிவாச பெருமாள், செயின் தெரசா வீதி அத்தி அரங்கநாதர், வில்லியனுார், வரதராஜ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் துவங்கி உள்ளது.விழா நாட்களில் நாள்தோறும் காலையில், திருமஞ்சனம், மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வரும், 10ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று இரவில் இருந்து ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.