புதுச்சேரி : சுண்ணாம்பாறு பாலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், அங்குள்ள பழைய பாலத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்குத் திறந்துவிட வேண்டும். புதுச்சேரி - கடலூர் ரோட்டிலுள்ள நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்ட பாலம், நூறு ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருந்து பழுதடைந்ததால் , அந்த பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டிய பிறகும், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டிகள் பலர் பழைய பாலத்தையே உபயோகப்படுத்தி வந்தனர். ஒரே நேரத்தில் இரண்டு பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வந்ததால், நெரிசல் தவிர்க்கப்பட்டு போக்குவரத்து சீராக இருந்து வந்தது.
நாளடைவில், பழைய பாலத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டதால், போக்குவரத்து தடைபட்டது. அனைத்து வாகனங்களும் புதிய பாலத்தின் வழியாகவே செல்கின்றன. அண்மையில் புதிய பாலத்தில் ஏற்பட்ட மெகா பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில நாட்களுக்கு முன், பாலத்தின் மீது புதிய சாலை புதிதாக போடப்பட்டது. அப்போது, வாகன போக்குவரத்து பழைய பாலம் வழியாக திருப்பி விடப்பட்டது.
புதிய பாலத்தின் வழியாக ஒரே சமயத்தில் அனைத்து வாகனங்களும் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, அவசர காலத்தில் பயன்பட்டு வரும் பழைய பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளைச் சீரமைத்தால், கனரக வாகனங்களைத் தவிர்த்து மற்ற வாகனங்கள் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் செல்வதற்கு உபயோகப்படும்.