காசி யாத்திரை சென்ற புதுச்சேரி பக்தர்கள் ராஜஸ்தான் எல்லையில் சிறைபிடிப்பு
புதுச்சேரி : காசி யாத்திரைக்கு சென்ற புதுச்சேரி பக்தர்கள் ராஜஸ்தான் எல்லையில் சிறைபிடிக்கப்பட்டனர்.புதுச்சேரியில், உருளையன்பேட்டை, சாரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 பேர் கடந்த 26ம் தேதி காசிக்கு ஆன்மிக பயணமாக பஸ்சில் புறப்பட்டனர். பல்வேறு மாநிலங்களை கடந்து டில்லியை அடைந்தனர்.தொடர்ந்து நேற்று ஆக்ராவில் இருந்து தாஜ்மகாலை சுற்றி பார்ப்பதற்காக சாலை மார்க்கமாக சென்றனர். ஆனால், பஸ் டிரைவர் வழி தெரியாமல் தாஜ்மகால் செல்லும் பாதையில் இருந்து விலகி வேறு பாதைக்கு சென்றார். அவர்கள் சென்ற பஸ் ராஜஸ்தான் மாநில எல்லைக்குள் புகுந்தது.ராஜஸ்தான் மாநிலத்திற்கு பர்மிட் இல்லாமல் சென்றதால், அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள் புதுச்சேரி பக்தர்கள் சென்ற பஸ்சினை தடுத்து நிறுத்தினர். அதையடுத்து பர்மிட் இல்லாததற்கு 3 ஆயிரம் உட்பட 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.அபராத தொகையை கட்ட முயன்றபோது, ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தான் பஸ்சினை விடுவிப்போம் என தெரிவித்தனர்.பஸ்சில் சென்றவர்களிடம் போதிய பணம் இல்லாத நிலையில் அனைவரையும் இறக்கி ஒரு கட்டடத்தில் தங்க வைத்தனர். பஸ்சில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இதனால் மொபைல் போன் மூலம் வீடியோ வெளியிட்டு தங்களை மீட்க வேண்டும் என, புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களிடம் கண்ணீர் மல்க முறையிட்டனர்.இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பக்தர்களை மீட்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார். முதல்வர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி., யை தொடர்பு கொண்டு புதுச்சேரி பக்தர்கள் ராஜஸ்தானில் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதை விளக்கி, மீட்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.அதையடுத்து முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின்பேரில், அமைச்சர் லட்சுமி நாராயணன், ராஜஸ்தான் மாநில அமைச்சர்களை தொடர்பு கொண்டு புதுச்சேரி பக்தர்களை விடுவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.கலெக்டர் குலோத்துங்கன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோரும் ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதுச்சேரி பக்தர் களை பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என, கேட்டுக்கொண்டனர். அதையடுத்து, 51 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பிறகு, மாலை 4:00 மணியளவில் புதுச்சேரி பக்தர்கள் அனைவரும் அதே பஸ்சில் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர்.
நிதியுதவி
எதிர்க்கட்சி தலைவர் சிவா உருளையன்பேட்டை தி.மு.க., பொறுப்பாளர் கோபாலிடம் ராஜஸ்தானில் தவிக்கும் புதுச்சேரி பக்தர்களுக்கு உதவும்படி அறிவுறுத்தினார். இதனால் கோபால் 60 ஆயிரம் ரூபாயை ராஜஸ்தானில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அரசு கண்டனம் தெரிவிக்குமா?
புதுச்சேரி பக்தர்கள் கூறுகையில், 'தவறுலாக நாங்கள் சென்ற பஸ் ராஜஸ்தான் மாநிலத்தில் நுழைந்துவிட்டது. முதலில் 7 ஆயிரம் ரூபாய் தான் அபராதம் விதித்தனர். நாங்களும் அதனை கட்ட தயாராகவே இருந்தோம். ஆனால் திடீரென 60 ஆயிரம் ரூபாய் கட்டுமாறு கூறினர். வக்கீல் ஒருவர் இடையில் வந்து 20 ஆயிரம் ரூபாய் கேட்டார். ஒரு நாளில் விடுவித்துவிடுவதாக தெரிவித்தார். இதனால் 80,000 ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வளவு தொகை எங்களிடம் இல்லை. வெளியூர் திசையில் தெரியாமல் இருப்பவர்களிடம் ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ளவில்லை. கலெக்டர் பேசுகிறார் என, மொபைல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மொபைல் போனை பிடுங்கி வைத்து கொண்டு தண்ணீர் கூட தராமல் சித்தரவதை செய்தனர். புதுச்சேரி அரசு ராஜஸ்தான் அரசிடம் தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்' என்றனர்.