உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

புதுச்சேரி, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

காரைக்கால்:விசைப்படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும், அருகிலுள்ள தமிழக பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு மீனவர்கள் படுகாயமடைந்தனர். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவரின் விசைப்படகில், அதே பகுதி மற்றும் நாகை நம்பியார் நகரை சேர்ந்த 13 மீனவர்கள், கடலில் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கு எல்லையில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் கால் மற்றும் முதுகு பகுதியில் காயமடைந்த மீனவர்கள் கிளிஞ்சல்மேடு செந்தமிழ், நம்பியார் நகர் பாபு ஆகியோர், உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர். பின், இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 13 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர் மேலும், விசைப்படகு, ஜி.பி.எஸ்., கருவி, மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இலங்கை துாதரிடம் கண்டனம்

புதுடில்லி: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஐந்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக, இலங்கை துாதரை நேரில் அழைத்து, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நம் வெளியுறவுத் துறை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நெடுந்தீவு அருகே தங்களுடைய மீன்பிடி படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், இரு மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மூன்று மீனவர்கள் காயமடைந்து உள்ளனர்.இதுபோன்ற சம்பவங்களை எந்த நிலையிலும் மத்திய அரசு ஏற்காது. சர்வதேச விதிகளுக்கும், இருதரப்பு ஒப்பந்தங்களுக்கும் உட்பட்டு இலங்கை அரசு நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, இந்தியாவுக்கான இலங்கையின் பொறுப்பு துாதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.அதுபோல, கொழும்பில் உள்ள இந்திய துாதரகமும், இலங்கை வெளியுறவுத் துறையிடம் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து மனிதநேய உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை