தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை குறுக்கு வீதிகள் மூடல் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் செக்
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக கனரக வாகனங்கள் செல்லாத வகையில் நேற்றிரவு குறுக்கு வீதிகள் அனைத்தையும் மூடி அதிரடியாக செக் வைத்தனர்.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை உள்ளே பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஆனால் ராஜிவ் சதுக்கம் வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கொக்கு பார்க் சந்திப்பு - கலால் துறை வழியாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் தாறுமாறாக புகுந்து செல்கின்றன.குறுகலான தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையில் கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் பறப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொழில்பேட்டை நுழைவு வாயிலில் நேற்றிரவு 7:00 மணியளவில் போலீசார் அதிரடியாக களம் இறங்கினர்.தட்டாஞ்சாவடியின் குறுக்கு வீதிகள் அனைத்தையிலும் பேரிகார்டுகளை போட்டு அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் கொக்குபார்க் வழியாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் குறுக்கு வழியாக புகுந்த வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 9:00 மணியளவில் பைக்குகள் மட்டுமே செல்ல பேரிகார்டுகளை சிறிது விலக்கி திறந்து விட்டனர்.இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பொது வழி அல்ல. இந்த வழியாக வாகனங்கள் புகுந்து செல்வதை அனுமதிக்க முடியாது. அனைத்து வாகனங்களும் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக புகுந்து செல்லாமல் ராஜிவ் சிக்னல் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். முதற்கட்டமாக பேரிகார்டுகளை போட்டு எச்சரித்துள்ளோம். விதிகளை மீறினால் அடுத்து அபராதம் விதிக்கப்படும்' என்றனர். இது மட்டுமே தீர்வு
கொக்குபார்க் சந்திப்பு - கலால் துறை வழியாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் வாகனங்கள் புகுந்து செல்கின்றன. எனவே, கோரிமேடு தொழில்பேட்டை நுழைவு வாயில் மற்றும் குறுக்கு வீதிகளை அடைத்து பேரிகார்டுகளை வைத்து தடுப்பது எந்த வகையிலும் உதவாது.தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள கான்பெட் பெட்ரோல் பங்க் அருகே பேரிகார்டுகளை நிறுத்தி, கொக்குபார்க் சந்திப்பு - கலால் துறை வழியாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்குள் புகும் வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தட்டாஞ்சாவடி வழியாக வாகனங்கள் உள்ளே நுழைவதை தடுக்க முடியும்.